கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய் மூலம் முதல் போக பாசனத்திற்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.
பாரூர் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்த ஆட்சியர் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர், அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கில்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட 2,397.42 ஏக்கர் பரப்பளவு உள்ள விளைநிலங்கள் பயன் பெறும்.
இன்று முதல் நவம்பர் 12-ஆம் தேதி வரையில் 135 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்படி முதல் 5 நாள்களுக்கு நாற்று விட தண்ணீர் விட்டு பிறகு முறை பாசனம் வைத்து மூன்று நாள்கள் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட்டும், நான்கு நாள்கள் மதகை மூடி வைத்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பாரூர் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்த ஆட்சியர் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி. உடன் தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்.
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். தண்ணீர் பங்கீட்டு பணிகளில் பொதுப்பணித்துறைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு எக்காரணத்தைக் கொண்டும் கால நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படமாட்டாது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.