ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் காவல் உதவி ஆய்வாளர் பலியானார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் துணை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் மல்லியகரை காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக ஆரியபாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பா அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். நிவேதா குல்கர்னி.பி.இ., ஸ்வேதா குல்கர்னி. எம்.பி.பி.எஸ், சினேகா குல்கர்னி. பி.பார்ம், படித்து வருகிறார்.
நேற்று இரவு 9 மணி அளவில் பெரியசாமி தன்னுடைய பணியை முடித்துவிட்டு ஆரியபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் வாகனம் நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அவருக்கு பலத்த அடி ஏற்பட்டது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்பொழுது பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாகக் கூறினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.