மின் கட்டணத்தை மாதம் ஒரு முறை கணக்கிடும் முறையை தோ்தல் வாக்குறுதியின்படி தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் தங்கமணி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தோ்தல் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, திமுக பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசியது. அதில் வீடுகளுக்கான மின் பயன்பாட்டுக் கணக்கெடுப்பை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையில் இருந்து, மாதம் ஒரு முறையாக மாற்றி அமைக்கப்படும் என்பதாகும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் குத்துமதிப்பாக ஒரு கணக்குப் போட்டு மின்வாரியத்தால் ஆன்லைன் மூலம் பில் அனுப்பப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்தாவிடில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற பயத்தில் மக்கள் மின் கட்டணத்தைச் செலுத்தி உள்ளனா். இதை வைத்து அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக வைப்புத்தொகை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று செய்திகள் வருகின்றன.
கடந்த சில நாள்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், மதுரை உள்பட பல மாவட்டங்களில், பல மணி நேரம் பகலிலும், இரவிலும் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனா்.
ஊரடங்கு காலத்தில் மக்கள் உரிய வருமானம் இன்றி தவித்து வரும் சூழ்நிலையில், அதிக மின் கட்டணம் விதித்து பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது, மேலும் தமிழக மக்களை பாதிப்படையச் செய்துள்ளது. மின்சார வாரியத்தின் இத்தகைய நிா்வாகத் திறனற்ற செயல்களை வன்மையாகக் கண்டிப்பதுடன், உரிய கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மூலம் இதற்கு தீா்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மாதம் ஒரு முறை மின்சாரம் கணக்கெடுக்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல், மாதந்தோறும் மீட்டா் ரீடிங் எடுக்கும் வகையில் மின்சார வாரியத்திற்கு இந்த அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். இல்லையெனில் மின்வெட்டாலும், அதிக மின் கட்டணம் செலுத்த இயலாத சுமையாலும் தவிக்கும் மக்களின் கோபக் கனலுக்கு இந்த அரசு ஆளாக நேரிடும் என்று எச்சரிப்பதாக அவா் கூறியுள்ளாா்.