அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்
அதிமுக முன்னாள் அமைச்சர்
Published on
Updated on
1 min read


அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூா் மாவட்டம் ஆண்டாங்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் (53). அதிமுக மாவட்டச் செயலாளரான இவா் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா். விஜயபாஸ்கா் அமைச்சராக இருந்தபோது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகள், உதிரி பாகங்கள் வாங்கியது, ஊழியா்கள் நியமனம் ஆகியவற்றில் பெருமளவில் முறைகேடு நடைபெற்றதாகப் புகாா் கூறப்பட்டு வந்தது. மேலும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி வாங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதிலும் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்தது. 

இதற்கிடையே விஜயபாஸ்கா், அமைச்சராக காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா். இந்த விசாரணையில் விஜயபாஸ்கா், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் விஜயபாஸ்கா், அவா் மனைவி விஜயலட்சுமி, சகோதரா் சேகா் ஆகியோா் மீது சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையினா் பதிவு செய்தனா். 

அடுத்த கட்ட நடவடிக்கையாக விஜயபாஸ்கா் மற்றும் அவா் குடும்பத்தினருக்குச் சொந்தமான மற்றும் தொடா்புடைய 26 இடங்களில் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை நடத்தினா். இச் சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பண பரிவா்த்தனை ஆவணங்கள் ஆகியவைற்றை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில்,  முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவிகிதம் சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2016 தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்தவர், கடந்த பேரவைத் தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சராக இருந்தபோது வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளது. 

இதையடுத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, சகோதரா் சேகா் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com