/

யானைகள் மிகுந்த அஞ்செட்டி வனப்பகுதியில் நடந்து சென்று மக்களிடம் குறைகேட்ட மா. சுப்பிரமணியன்

பெட்டமுகிலாலம் மலைக் கிராமத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

News image
யானைகள் மிகுந்த அஞ்செட்டி வனப்பகுதியில் நடந்து சென்று மக்களிடம் குறைகேட்ட மா. சுப்பிரமணியன்
Updated On :28 ஜனவரி 2024, 3:46 am

DIN


ஓசூர்: யானைகள் அதிக அளவில் வாழ்ந்து வரும் ஓசூர் வனக்கோட்டம் அஞ்செட்டி வனப்பகுதிக்கு அருகே பெட்டமுகிலாலம் மலைக் கிராமத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாலம் ஊராட்சியிலுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒய். பிரகாஷ் ஆகியோருடன் பெட்டமுகிலாலம் ஊராட்சி மூக்கன்கரை கிராமத்திற்கு அதிகாலை நடைப்பயணமாக சென்று அக்கிராமத்தில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். அதில் மலை கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பெட்டமுகிலாலம் மலை கிராமப்பகுதியில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விரைவில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும். மேலும் இந்தப் பகுதியில் அடிக்கடி நிகழும் குழந்தை திருமணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மலைக் கிராமத்தில் வசித்து வரும் பெண்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா எனக் கேட்டறிந்தார். மேலும் அவர்களிடம் முதியோர் உதவித்தொகை கிடைக்கிறதா?என்பதையும் கேட்டறிந்தார். அவருடன் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்பட பலர் நடைப்பயணமாக 15 கிலோமீட்டர் சென்றனர். யானைகள் மிகுந்த அஞ்செட்டி வனப்பகுதியில் இருந்து பஞ்சப்பள்ளி வழியாக தர்மபுரி மாவட்டத்திற்கு அவர் சென்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.