இந்துசமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அறநிலையத் துறை ஆணையாளர் தற்போது திருக்கோயில்களில் பணிபுரியும் சுமார் 40 ஆயிரம் தொகுப்பூதியப் பணியாளர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனால், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தற்காலிகப் பணியாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகி உள்ளது.
எனவே, இந்த தேவையற்ற முடிவினை கைவிட்டு, நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்தவாறு குறைந்த சம்பளத்தில் நீண்ட காலமாக தினக் கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ் நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.