திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் இன்று முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
மார்ச் 1 முதல் நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோா், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் சுட்டுரைப் பக்கத்தில்,
"கரோனா முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன்.
குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்" என்றார்.