திருச்சி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் எம். முருகானந்தத்தின் மீது மூன்று பிரிவின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம். அவர் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக கூட்டணிக் கட்சியினருடன் ஊர்வலமாக வந்த போது, பட்டாசுகளை வெடித்தனர்.
இதனையடுத்து, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வெடி பொருள்களை வெடித்தது , காவல்துறை உத்தரவை மீறியது மற்றும் பொதுமக்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் கூட்டம் கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலீசாருக்கும் மெமோ: இந்த சம்பவத்தில் விதிகளை அமல்படுத்த தவறிய திருவெறும்பூர் காவல் ஆய்வாளருக்கும் விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முருகானந்தம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது தேர்தல் அலுவலகத்திற்குள் இரண்டு பேருக்கு மேல் அனுமதித்தது மற்றும் தேர்தல் அலுவலகம் அருகே மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூடியதை தடுக்க தவறியது உள்ளிட்ட சம்பவங்களுக்காக விளக்கம் கேட்டு ஆய்வாளர் ரத்தினகுமாருக்கு திருவெறும்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் மெமோ கொடுத்துள்ளார்.