மேட்டூர்: 121 நாள்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி 100 அடியை எட்டியது. காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கணிசமாக குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து.
ஜனவரி 24 ஆம் தேதி நீர்மட்டம் 105.97அடியாக உயர்ந்தது. ஜனவரி 28 ஆம் தேதி அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவும் ஆயிரம் கன அடியாக சரிந்தது.
ஜனவரி 29 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல சரியத் தொடங்கியது.
நீர்வரத்து சரிந்த நிலையில் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. 121 நாள்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்து 99.93 அடியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 68 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.75 டி.எம்.சியாக இருந்தது.