
சென்னை: சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது, மாநில நலன் சார்ந்த விஷயங்களில், முக ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி போல செயல்படுவார் என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் பாஜகவுக்கு மரண அடி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி இமாலய வெற்றி பெற்றுள்ளார். மேற்கு வங்கத்தில் 3-வது முறையாக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளார்.
கேரளத்திலும் பாஜகவை புறக்கணித்திருக்கிறார்கள். தமிழகத்தில் பாமகவையும், அதிமுகவையும் பயன்படுத்தி அவர்களது முதுகிலே சவாரி செய்து இங்கு பெரிய அரசியல் சக்தியாக மாற வேண்டும் என்று கணக்குப் போட்ட பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.
மதவாத சக்தியால் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்த பாஜகவுக்கு பாடம் புகட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 இடங்களில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும், மக்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படும் என்று திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஸ்டாலின் முதல் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.