புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15 -ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிந்து, என்ஆர் காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
மொத்தமுள்ள 30 இடங்களில் இக்கூட்டணி 16 (என்.ஆர். காங்கிரஸ் 10, பாஜக 6) இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது.
என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
இதற்கான ஆதரவு கடிதத்தை அவர் துணை நிலை ஆளுநர் தமிழிசை இடம் வழங்கி உரிமை கோரியிருந்தார்.
இதனையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பகல் 12. 30 மணிக்கு தொடங்க உள்ள இந்த பதவியேற்பு விழாவில், அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும் பங்கேற்கின்றனர்.
பிற்பகல் 1.20 மணிக்கு என் ரங்கசாமி முதல்வராக பதவியேற்கிறார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். தலைமைச் செயலர், தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தின் 20-ஆவது முதல்வராக இன்று வெள்ளிக்கிழமை ரங்கசாமி பதவியேற்கிறார். இவர் நான்காவது முறையாக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்கிறார்.
இரண்டு முறை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் முதல்வராகவும், அதன்பிறகு 2011-இல் என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி ஒரு முறை முதல்வராக இருந்துள்ளார்.