போக்குவரத்து ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகள், சலுகைகள், போக்குவரத்து ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கரோனா பரவி வரும் பெருந்தொற்று காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் போக்குவரத்து ஊழியர்களின் பணி போற்றுதலுக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், போக்குவரத்து ஊழியர்களுக்கு வரும் 31-ம் தேதியுடன் காலாவதியாக இருக்கும் மருத்துவக் காப்பீட்டினை மேலும் ஓராண்டிக்கு நீட்டிக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டினை விரிவுபடுத்த வேண்டும்.
பணி ஓய்வு மற்றும் விருப்ப பணி ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் ஓய்வு கால பயன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்ற வழக்கு போன்ற காரணங்களினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.