தம்மம்பட்டி: தம்மம்பட்டியில், மக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்பதற்காக, சில சாலைகள் மற்றும் தெருக்களை தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மூங்கில் கட்டைகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளன.
தம்மம்பட்டி பேரூராட்சியில் பொது முடக்கத்தை மீறி, பலர் ஊர்சுற்றி வருகின்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும், அவர்களிடம் சிக்காமல், சிறு சந்துக்கள், தெருக்கள் வழியாக வெளியே சென்று வருகின்றனர். இதனால், அத்தகைய சந்துகள், தெருக்களை அடைக்க தம்மம்பட்டி போலீசார் அறிவுறுத்தினர்.
அதையடுத்து, சந்தைரோடு, குரும்பர்தெரு, கடைவீதி, சிவன்கோயில் ரோடு, உடையார்பாளையத்தில் இருந்து காந்திநகர் செல்லும் நுழைவு வாயில் முன், மூங்கில் கட்டைகளை கட்டி தடுப்புகள் அமைக்க தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி உத்தரவின் பேரில், தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தடுப்புகள் இல்லாமல், மக்கள் வெளியே செல்லும் வழிகளில் தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, முகக் கவசம் அணியாதவர்கள், ஊர் சுற்றுபவர்கள் என போலீசார் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.