உளுந்தூர்பேட்டை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் கொட்டும் மழையிலும் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் இன்று புதன்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
உளுந்துர்பேட்டை பகுதியில் விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. உப தொழிலாக ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வளா்ப்பு உள்ளது. இங்கு வாரம்தோறும் புதன்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை சந்தை, காலை 7 மணியில் இருந்து நடைபெற்றது. இந்த சந்தைக்கு உளுந்தூர்பேட்டை மட்டுமல்லாது மங்கலம்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். நாளை வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சந்தை நடைபெற்றது.
சந்தை தொடங்கி நடைபெற்ற 2 மணி நேரத்தில் ரூ. 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின. இந்த ஆண்டு தொடா் மழை காரணமாக ஆடுகள் விலையும் சற்று அதிகமாக இருந்தது. தீபாவளியை முன்னிட்டு ரூ. 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.