மணப்பாறை அருகே பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் ஆற்றினை கடந்து சேறும் சகதியில் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படுமென பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியின் 3 ஆவது வார்டுக்குள்பட்ட பகுதி சங்கமரெட்டியப்பட்டி. இங்கு சுமார் 60 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதி நகராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், தனித்துவிடப்பட்ட ஓர் குட்டி கிராமம். இங்கிருந்து சுமார் 40 மாணவ மாணவியர்கள் தங்களுக்கு கல்விக்காக பள்ளிக்கு செல்ல 3 கி.மீ. தொலைவில் உள்ள செவலூர், மணப்பாறை, குதிரைகுத்திப்பட்டி, ஆளிப்பட்டி, மாகாளிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தான் செல்லும் நிலை. தற்போது பெய்து வரும் பருவமழையால் குப்பாயிமலை பகுதியிலிருந்து மரவனூர் வரை செல்லும் உப்பாற்றில் தற்போது நீர்வரத்து இருந்து வருகிறது.
ஆற்றினை கடந்து சேறும் சகதியில் நடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள்.
இந்நிலையில், இந்த உப்பாற்றின் கால்வாய் பகுதிகளில் தடுப்பணை உடைந்து இருப்பதால், நீரில் இறங்கி கடந்து தான் சங்கமரெட்டியப்பட்டி மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இதையும் படிக்க | கும்பகோணத்தில் இளைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை
மேலும் சங்கமரெட்டியப்பட்டியிலிருந்து செவலூர் - தொப்பம்பட்டியின் பிரதான சாலையை எட்டுவதற்கு சுமார் 1 கி.மீ. சகதிகளை மாணவ, மாணவியர்கள் கடந்து செல்லும் அவல நிலையும் உள்ளது. நடந்து செல்லும் மாணவ மாணவியர்களுக்கே இந்நிலை ஏன்றால், சைக்கிளில் செல்லும் மாணவியர்கள் நிலை அந்தோ பரிதாபம் தான்.
தினந்தோறும் ஆற்றில் இறங்கியும், சகதியில் நடந்தும் செல்லும் தங்களது பிள்ளைகளுக்கு நோய் தொற்று வந்துவிடும் என அச்சமடைந்து வரும் பெற்றோர்கள், ஆற்றை கடந்து செல்ல ஓர் பாலமும், சகதிகளை அகற்றி தரமான சாலையை மட்டுமே நகராட்சி நிர்வாகத்தினரிடம் கோரிக்கையாக வைக்கின்றனர்.