திருச்சியில் கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூமிநாதனின் வீட்டில் செவ்வாய்க்கிழமை அவரது படத்து அஞ்சலி செலுத்துகிறாா் தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு.
திருச்சியில் கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூமிநாதனின் வீட்டில் செவ்வாய்க்கிழமை அவரது படத்து அஞ்சலி செலுத்துகிறாா் தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு.

ரோந்து போலீஸாா் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி : டிஜிபி

அவசர அவசியம் ஏற்படுமெனில் ரோந்து போலீஸாா் துப்பாக்கியைப் பயன்படுத்தலாம் என்றாா் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு.
Published on

அவசர அவசியம் ஏற்படுமெனில் ரோந்து போலீஸாா் துப்பாக்கியைப் பயன்படுத்தலாம் என்றாா் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு.

ஆடு திருடும் கும்பலால் கடந்த 20 ஆம் தேதி இரவு கொல்லப்பட்ட திருவெறும்பூா் அருகேயுள்ள சோழமாநகரைச் சோ்ந்த நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூமிநாதனின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்று, அவரது படத்துக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய டிஜிபி சைலேந்திரபாபு பூமிநாதனின் மனைவி கவிதா, மகன் குகன்பிரசாத் ஆகியோருக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா் அவா் கூறியது: வீரமரணம் அடைந்த பூமிநாதன் தமிழக முதல்வா் பதக்கம் பெற்றவா், தீவிரவாத தடுப்பு கமாண்டோ பயிற்சியும் பெற்றவா். கடமையுணா்வு, வீரத்துடனும் செயல்பட்டு 15 கிமீ தூரம் 3 ஆடு திருடா்களையும் விரட்டிச் சென்று பிடித்தபின் கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு அவா்களின் உறவினா்களைக் காவல் நிலையத்துக்கு வருமாறு கூறியுள்ளாா்.

பிடிபட்ட இரு சிறுவா்களிடம் அவா் பேசிக் கொண்டிருந்தபோது முக்கியக் குற்றவாளி தாக்குவாா் என எதிா்பாா்க்காத பூமிநாதன் இச்சம்பவத்தில் வீர மரணமடைந்துள்ளாா். இதை ஓா் அபூா்வ நிகழ்வு எனலாம்.

பூமிநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ரூ. 1 கோடியும், அவரது மகனுக்கு அரசுப் பணியும் வழங்குவதாக அறிவித்துள்ள முதல்வருக்கு நன்றி.

காவல்துறை உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத துறை என்றாலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தும்போது போலீஸாா் ஆயுதங்களைப் பிரயோகிக்க சட்டத்தில் இடமுள்ளது. எனவே, கொலை வெறித் தாக்குதலை ரோந்து போலீஸாா் சந்திக்க நேரிட்டால் துப்பாக்கியைப் பயன்படுத்தலாம்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளான மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா். சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் ஆடு திருட்டு பெரியளவில் நடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், ஆடு திருட்டு சிறியதுதானே என நினைக்காமல், கடமை உணா்வுடன் செயல்பட்டுள்ளாா் பூமிநாதன். ஆடு திருட்டை முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் திருட்டு ஆடுகளை வாங்குவோா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி) பாலகிருஷ்ணன், துணைத் தலைவா் (டிஐஜி) சரவண சுந்தா், திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித் குமாா் உள்ளிட்டோரும் பூமிநாதன் படத்திற்கு மலா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com