சென்னை: தமிழகத்தில், குமரி, நெல்லை, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,
தமிழகத்தில் இன்று, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 24 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.