காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக மக்கள் மன்றத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொண்ட 15-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடியை மாநகராட்சியாகவும், தனி மாவட்டமாகவும் அறிவிக்கவேண்டும், காரைக்குடி புதிய அரசு மருத்துவமனையில் ஐ.சி.யு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தியும், பழைய அரசு மருத்துவமனையில் சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம், யுனானி என ஆயுஸ் மருத்துவ மனையாக மாற்ற வேண்டும், காரைக்குடி வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் ஒதுக்கப்பட்ட சிப்-காட்டினை மீண்டும் கொண்டுவர வேண்டும், காரைக்குடி சம்பை ஊற்று பகுதியிலிருந்து கோவிலூர் தனியார் ரசாயண ஆலைக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்வது நிறுத்தப்பட வேண்டும், காரைக்குடியில் 70 ஆண்டு கால சிமெண்ட் சாலையை பழமையான சுற்றுலா சாலையாக அறிவிக்கவேண்டும், சங்கரபதி கோட்டையை சுற்றுலா தலமாக ஆக்க வேண்டும், காரைக்குடி அண்ணாநகர், ஜீவா நகர், கழனிவாசல் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என 7 அம்ச கோரிக்கைகளை அறிவித்து நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டி தமிழக மக்கள் மன்ற தலைவர் ச.மீ. ராசகுமார் தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இக்கோரிக்கைகளில் அறிவிக்கப்பட்ட காரைக்குடி சிப்காட்டை கொண்டுவர வேண்டும் என்பதை கைவிட வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதால் அதற்கு உண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
அதனால் மக்கள் மன்ற தலைவர் ச.மீ. ராசகுமார், செயலாளர் கேஆர். ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.