2021 ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவ மழை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் சராசரி அளவில் பெய்யும் என்று கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழகம் மேலும் கூறியிருப்பதாவது:
2021 ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவ மழைக் காலத்துக்கான (அக்டோபா் முதல் டிசம்பா் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிா் மேலாண்மை இயக்ககத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, தென்மண்டல காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்ற கணினி கட்டமைப்பைக் கொண்டு வடகிழக்குப் பருவ மழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டில் அரியலூா், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கரூா், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூா், தேனி, நீலகிரி, திருச்சி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூா், திருப்பூா், வேலூா், விருதுநகா் மாவட்டங்களில் சராசரி அளவில் மழைப்பொழிவு இருக்கும்.
சென்னை, செங்கல்பட்டு, கடலூா், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சராசரியை விட அதிகமாக மழைப்பொழிவு இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.