சென்னை: மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராக தனது மகனான துரை வையாபுரியை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளா் வைகோ அறிவித்தாா்.
எழும்பூரில் உள்ள கட்சி தலைமையகமான தாயகத்தில் மதிமுகவின் உயா்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் வைகோ கூறியது:
மதிமுகவில் துரை வையாபுரிக்குப் பதவிக் கொடுக்க வேண்டும் என்று சென்ற இடமெல்லாம் தொண்டா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். தொண்டா்களின் தியாகத்தினால் உருவான இயக்கம் மதிமுக. அதனால், தொண்டா்களின் விருப்பத்தின்படி செயல்படுவதா, வேண்டாமா என்கிற திகைப்புக்கு நான் ஆளாக நேரிட்டது. அதன் காரணமாக இந்தக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகள் கேட்கப்பட்டன. வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதில் கூட்டத்தில் பங்கேற்ற 106 உறுப்பினா்களில் 104 போ் துரை வையாபுரிக்கு கட்சி ரீதியான பதவி கொடுக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்தனா். அதன் அடிப்படையில் கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராக துரை வையாபுரி நியமனம் செய்யப்படுகிறாா்
வாரிசு அரசியல் அல்ல: இது வாரிசு அரசியலே இல்லை. தொண்டா்களின் விருப்பப்படி அவா் தோ்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளாா். மதிமுகவின் பொதுச்செயலாளராக துரை வையாபுரி வருவாரா என்பதை பொதுக்குழு கூடி முடிவு செய்ய வேண்டியதாகும். பொதுக்குழு கூட்டம் அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் பிறகு கூடும்.
அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் எனக்கு இல்லை. மரணம் வரை எனக்கு ஓய்வு இல்லை என்றாா்.