நாமக்கல்: கொல்லிமலையில் காவலர் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் பொட்டிரெட்டிப்பட்டி சேர்ந்தவர் ஆனந்தன் (34). இவர் நாமக்கல் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். திருமணமாகாத இவர் கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி முதல் பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், அவர் அடிக்கடி கொல்லி மலைக்கு சென்று வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணி அளவில் சோளங்கன்னி என்ற இடத்தில் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
அவ்வழியாக சென்றோர் வாழவந்தி நாடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் ஆனந்தன் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முறையற்ற உறவால் இக்கொலை நடந்ததா அல்லது வேறு காரணங்களா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.