கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே நிலக்கடலை தோட்டத்திற்கு இரவு காவலுக்கு சென்ற இரண்டு பேர் யானை தாக்கி உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஆனது ஆந்திரம் கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த இரு மாநில வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி வேப்பனபள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானை தாக்கி சிலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்திற்கு உள்பட்ட சிகரலபள்ளி கிராமத்தை சேர்ந்த சந்திரன்(30), நேரலகிரி கிராமத்தைச் சேர்ந்த நாகன் (50) ஆகியோர் உயிரிழந்தனர்.
இவர்கள் இருவரும் தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள அவர்களது நிலக்கடலை தோட்டத்திற்கு இரவு காவலுக்கு சென்றவர்கள். வெள்ளிக்கிழமை காலை அவர்கள் வீடு திரும்பாத நிலையில், அவரது உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது இருவரும் யானை தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்தற்கு வந்த வேப்பனப்பள்ளி போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யானை கர்நாடக வனப்பகுதியில் இருந்து சிகரலப்பள்ளி வழியாக வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.