சேலம் மாவட்டத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் உறுதி

ஜவ்வரிசி உற்பத்தியில் பெயர்பெற்று விளங்கும் சேலம் மாவட்டத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
சேலம் ஸ்டார், சேகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழில் கூட்டுறவு சங்கத்தில் மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பேசும் விவசாயி.
சேலம் ஸ்டார், சேகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழில் கூட்டுறவு சங்கத்தில் மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பேசும் விவசாயி.


சேலம்: ஜவ்வரிசி உற்பத்தியில் பெயர்பெற்று விளங்கும் சேலம் மாவட்டத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிநவீன ஜவ்வரிசி ஆலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் மரவள்ளி விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். 

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 
கடந்த நான்கு மாத கால திமுக ஆட்சியில் தேர்தலின் போது அளிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன. மக்களின் கருத்தை கேட்டு உணர்வுகளை புரிந்து ஆட்சி நடைபெற்று வருகிறது. 

மக்களின் உணர்வு பெற்ற ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பதை இன்றைய ஆட்சியின் மிக முக்கியமான கொள்கையாக உள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக பல்வேறு தரப்பினரையும் மாவட்ட, மாவட்டமாக சென்று சந்தித்து கலந்து பேசி அதற்கு பிறகுதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் மரவள்ளி விவசாயிகளை கோரிக்கைகளை கேட்டு அவை நிச்சயம் நிறைவேற்றப்படும்.

ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கு புதிய சேமிப்பு கிடங்கு ஜவ்வரிசியை உணவு பொருளாக பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன் ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க குழு அமைக்கப்படும்.  பொதுமக்களுக்கு நியாயமான விலையில் ஜவ்வரிசி கிடைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த நான்கு மாதத்தில் தமிழகத்தில் தொழில்துறை புத்துணர்வு அடைந்துள்ளதாக குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தெற்காசிய அளவில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிடும் வகையில் புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், புதிய தொழில்களை ஈர்க்கும் வகையில் உள் கட்டமைப்புகளை மேம்படுத்த 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 17 ஆயிரத்து 149 கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு மூன்றாவது பெரிய மாநிலமாக இருப்பதை குறிப்பிட்ட முதல்வர் தமிழ்நாட்டினை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஏற்றுமதிக் கொள்கை அமைக்கப்படும். திருப்பூர், மதுரை, கோவை உள்ளிட்ட 10 ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்படும். நகரம், கிராமம் வேறுபாடின்றி பெருந்தொழில், சிறுதொழில் பேதமின்றி தொழில் கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும். தொழிலதிபர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், ஜவ்வரிசி உற்பத்தியில் பெயர்பெற்று விளங்கும் சேலம் மாவட்டத்தை சர்வதேச தரத்தில் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com