சென்னை நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தினார்.
நீலாங்கரையிலுள்ள தனது வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்திலுள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிள் ஓட்டி வந்து வாக்களித்தார்.
பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் வந்ததாக அவரது ரசிகர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய பிறகு சைக்கிளில் வீடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதிக அளவிலான ரசிகர்கள் குவிந்ததால், ரசிகர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் நடிகர் விஜய் வீடு திரும்பினார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு 7 மணிக்குத் தொடங்கினாலும் காலை 6 மணி முதலே பல வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.
காலை முதலே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மநீம கட்சித் தலைவர் கமல், நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.