சென்னை: நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதியுடன் எஸ்ஐஇடி கல்லூரிக்கு வந்து, பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். தமிழகம் முழுவதும் அமைதியாகவும், முறையில் தமிழக மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருவதாக செய்திகள் மூலம் அறிகிறேன்.
இதற்கான முடிவு மே 2-ஆம் தேதி வெளியாகும் போது சிறப்பாக இருக்கும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்தியாகவும் இல்லை, அதிருப்தியாகவும் இல்லை என்று பதிலளித்தார்.
மேலும், கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அதிமுக கோரிக்கை வைத்தது குறித்த கேள்விக்கு, ஆளுங்கட்சியின் தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்த வலியுறுத்தியது. ஆனால் அதனை ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார்.