திருப்பூர் மாவட்டத்தில் உயர் மின் கோபுரத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சூரியநல்லூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பிலும், பல்லடம் அருகே உள்ள வாவிபாளையத்தில் பவர்கிரீட் நிறுவனம் சார்பிலும் உயர் மின் கோபுரத்திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆகவே, மேல்முறையீடு முடியும் வரையில் உயர் மின் கோபுரத் திட்டப் பணிகளை நிறுத்தி வைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
ஆகவே, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்குரைஞர் மு.ஈசன் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற விவசாயிகள் மேல் முறையீடு முடியும் வரையில் உயர்மின் கோபுர திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் முத்துவிஸ்வநாதன், உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.