சென்னை: சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறையில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சோதனை நடைபெற்று வருவதை அறிந்த ஆதரவாளர்களும், பத்திரிகையாளர்களும் அப்பகுதியில் குவிந்தனர்.
லஞ்ச ஒழிப்புக் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் சோதனை நடைபெற்று வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு நெருக்கமானவர் வீடு உள்பட 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளதாகக் கூறி அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், இன்று அவரது வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.