சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவையில் உள்ள வீடு உள்பட அவருக்குச் சொந்தமான மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு உள்பட தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்கியிருக்கும் எஸ்.பி. வேலுமணியிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் எம்எல்ஏ விடுதி இருக்கும் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் மூலம் முறைகேடு செய்த புகாரின் கீழ் எஸ்.பி. வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்.பி. வேலுமணியின் கோவை குனியமுத்தூரில் உள்ள வீடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேளச்சேரயில் உள்ள வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் வீடு, கோடம்பாக்கம் ரெங்கராஜபுரத்தில் கேசிபி இன்ப்ரா லிமிடட் நிறுவனம் உள்ளிட்டவற்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நமது அம்மா நாளிதழ் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வேலுமணியின் நெருங்கிய நண்பர் சந்திரசேகர் நமது அம்மா நாளிதழில் வெளியீட்டாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர் வீடு, மாதவரத்தில் உள்ள பால் பண்ணை பேங்க் காலனியில் உள்ள கட்டுமான நிறுவனத்திலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.