கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனை செய்து வரும் நிலையில், தமிழகத்தில் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான சிலரது வீடு உட்பட 52 இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில் சென்னையில் மட்டும், 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அரசு ஒப்பந்தப்பணிகள் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.20 கோடி மோசடி செய்து விட்டதாக எஸ்.பி வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சோதனை நடைபெற்று வரும் நிலையில் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி. வேலுமணி இல்லம் முன்பு குவிந்துள்ள அ.தி.மு.க. ஆதரவாளர்கள் தி.மு.க அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புசோதனை நடத்தி வரும் நிலையில், வீட்டு முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.