கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் செவ்வாய்க்கிழமை சுட்டுரையில் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இன்று பகல் 11.45 மணியளவில் கே.டி. ராகவன் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில்,
“தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதி பலனும் இன்றிப் பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு விடியோ வெளி வந்ததை அறிந்தேன்.
என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த விடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜிநாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன்.”
சமீபத்தில் பாஜகவில் இணைந்தவரான பத்திரிகையாளர் ஒருவரின் யூடியூப் சேனலில் இன்று காலை கே.டி. ராகவன் பற்றி வெளியிடப்பட்ட சர்ச்சை காணொலி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அந்த யூடியூப் காணொலியில், பாஜகவில் உள்ள பெண்களிடம் கே.டி. ராகவன் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொள்வதாகக் காணொலி இடம்பெற்றுள்ளது. இந்தக் காணொலியை பாஜக தலைவர் அண்ணாமலையிடம் தெரிவித்துவிட்டுதான் யூடியூபில் வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற செயல்களில் பாஜகவை சேர்ந்த 15 தலைவர்கள் ஈடுபட்டுவருவதாகவும் இதுதொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும் இந்தக் காணொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.