ஒமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 150 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உருமாற்றம் அடைந்த புதிய 'ஒமைக்ரான்' வகை கரோனா முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சவூதி அரேபியா, நைஜீரியா உள்ளிட்ட 23 நாடுகளில் பரவியுள்ளது.
மற்றவகை கரோனா வைரஸைவிட இது அதிக பாதிப்பு உடையது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் பயணக்கட்டுப்பாடு, மருத்துவப் பரிசோதனை என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்திலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 150 படுக்கைகள் தனியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் 15 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.