தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற 13வது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 20.98 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், முதல்வரின் உத்தரவுப் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி பணிகள் நடைபெற்றது. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது.
இதுவரை நடைபெற்ற 12 மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில் 2 கோடியே 22 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள். இன்று (04-12-2021) நடைபெற்ற 13வது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 20,98,712 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 7,50,147 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 13,48,565 பயனாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 80.44% முதல் தவணையாகவும் 47.46% இரண்டாம் தவணையாகவும் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அரசு கரோனா தடுப்பூசி மையங்களில் மட்டுமே 7 கோடிக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்து. இன்று உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடியுடன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிறுபான்மையினர் நலன் (ம) வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானும் விழுப்புரம் மாவட்டத்திற்க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை நேரடி கள ஆய்வு செய்தனர்.
மேலும், மாநிலத்தில் இன்று (04.12.2021) நடைபெற்ற 13வது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை (05.12.2021) கரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.