மகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் வழங்கிய சுழல் நிதி காசோலை: கூட்டுறவு வங்கி பணம் தர மறுப்பு

திருவள்ளூரில் மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு வழங்கிய சுழல் நிதிக்கான காசோலைக்கு பணம் ஒதுக்கவில்லை என தர மறுத்ததோடு, சம்பிரதாயத்திற்காக வழங்கியதாக
ஆட்சியரிடம் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ள மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள்.
ஆட்சியரிடம் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ள மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள்.

திருவள்ளூர்: திருவள்ளூரில் மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு வழங்கிய சுழல் நிதிக்கான காசோலைக்கு பணம் ஒதுக்கவில்லை என தர மறுத்ததோடு, சம்பிரதாயத்திற்காக வழங்கியதாகவும் மத்திய கூட்டுறவு வங்கி திருப்பி அனுப்பியதால் அக்குழுவைச் சேர்ந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு விழாவில் மாநில அளவில் ரூ.3 ஆயிரம் கோடி அளவில் பல்வேறு வங்கிகள் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில், தமிழக முதல்வர் பங்கேற்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு காசோலைகளை வழங்கியதோடு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் கலந்துரையாடலும் மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவள்ளூர், ஆவடி, பொன்னேரி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.105 கோடி மதிப்பிலான சுழல் நிதிக்கான காசோலை மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதேபோல், திருவள்ளூர் நகராட்சிக்குள்பட்ட பெரியகுப்பத்தில் உள்ள கார்த்திகை மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க தேர்வு செய்தனர். அதன் அடிப்படையில் அன்றைய நாளில் முதல்வரால் ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. 

இதையடுத்து திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் முதல்வரால் வழங்கிய காசோலை சுழல் நிதியை கணக்கில் வரவு வைப்பதற்காக ஆர்வத்துடன் குழுவினர் சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்த வங்கி அதிகாரிகள் முதல்வர் வருவதால் சம்பிரதாயத்திற்காக அவசரமாக வழங்கியதாகவும், இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்றும், உங்கள் துறை அதிகாரிகளிடம் காசோலையை திருப்பி அளிக்கும் படி வங்கி அதிகாரிகளிடம் கூறினார்களாம். இதனால் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 12 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கார்த்திகை மகளிர் குழுவைச் சேர்ந்த பிரியங்கா கூறுகையில், கடந்த 14-ஆம் தேதி திருத்தணியில் நடைபெற்ற முதல்வர் விழாவிற்கு காலை 6 மணிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அழைத்துச் சென்றவர்களுக்கு காலை உணவு எதுவும் வழங்கவில்லை. 

அதைத் தொடர்ந்து ஒரு சாலையோர உணவகத்தில் சாப்பிட்டு அதற்கான பில் வழங்கினால் தொகை வழங்கப்படும் எனவும் மகளிர் திட்ட அதிகாரிகள் தெரிவித்தார்களாம். 

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் வழங்கிய ரூ.5 லட்சத்திற்கான காசோலைக்கு செல்லேட்டில் வரவு வைக்க குழுவுடன் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு சென்றோம். அப்போது, தமிழக முதல்வர் பங்கேற்பதால் அவசரமாக சம்பிரதாயத்திற்காக காசோலைகள் வழங்கியதாகவும், அதனால் மகளிர் திட்ட அதிகாரிகளிடம் திருப்பி அளிக்கவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதையடுத்து முதல்வர் வழங்கிய காசோலைக்கு பணம் வழங்காமல் எப்படி இல்லை எனக் கூறி திருப்பி அனுப்புவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் பணம் கொடுக்கவில்லை. அதனால் மனஉளைச்சளுக்கு ஆளான நிலையில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த ஆட்சியரிடம் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com