கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே வவ்வால் பிடிக்கச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி புதன்கிழமை உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் லோயர் கேம்ப், 21 ஆவது வார்டு கண்ணகி கோயில் சாலை, அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் பரமசிவம் மகன் பிரசாந்த் (27), இவருக்கு திருமணமாகி 7 மாதமாகிறது.
இவர் இதே பகுதியைச் சேர்ந்த பழுத்த ராசா மகன் சேகருடன் சேர்ந்து கண்ணகி கோயில் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றார்.
அப்போது கொட்டக்கார ராசா என்பவரது தோட்டத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது.
அருகே இருந்த உலவு மரத்தில் வவ்வால் தொங்கிக் கொண்டிருந்தது.
இதை பார்த்த பிரசாந்த் உலவு மரத்தின் மீது ஏறி, கையில் கொண்டு சென்ற இரும்பு கொரண்டியைக்கொண்டு வௌவாலை இழுத்தார், அப்போது அருகே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் இரும்பு கொரண்டி பட்டு மின்சாரம் பிரசாந்த்தை தாக்கியது.
இதில், மின்சாரம் தாக்கி அலறியபடி கீழே விழுந்தார், அருகே உள்ளவர்கள் பிரசாந்த்தை தூக்கிக்கொண்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் குமுளி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆர்.லாவண்யா, சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ் ராஜா ஆகியோர் பிரசாந்த் பிரேதத்தை கைப்பற்றி, கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத விசாரணைக்கு ஒப்படைத்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.
வியாழக்கிழமை பிரசாந்த் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது, உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | ஜவ்வரிசியில் கலப்படம்: நஷ்டத்தில் மரவள்ளி விவசாயிகள்