
கோப்புப்படம்
தூத்துக்குடி கதிர்வேல் நகரில் நண்பர்களே சேர்ந்து நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் மாரிமுத்து (36). கூலித் தொழிலாளி. பாலவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பச்சைபெருமாள் மகன் லட்சுமணன் (41), அண்ணா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மதுரைமுத்து (24). இவர்கள் மூவரும் நண்பர்கள். லட்சுமணனும் மதுரைமுத்துவும் மாரிமுத்துவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்களாம்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாரிமுத்து வெளியூர் சென்றிருந்தபோது, அவரது வீட்டில் பொருட்கள் திருடுபோனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது அவரது நண்பர்கள் தான் அங்குவந்து சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனால் நண்பர்கள் மீது சந்தேகம் அடைந்த அவர் லட்சுமணனையும், மதுரைமுத்துவையும் "எனது வீட்டில் ஏன் திருடினீர்கள்?" என்று கேட்டு கண்டித்தாராம். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் லட்சுமணன் மற்றும் மதுரை முத்து அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர். நேற்று இரவு மாரிமுத்துவை மது குடிக்க அழைத்துச் சென்றுள்ளனர். நள்ளிரவு 2 மணியளவில் நல்ல போதையில் இருந்த மாரிமுத்துவை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயகுமார், டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...