தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகம் இன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்து, புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் 46-ஆவது தலைமைச் செயலாளராக உள்ள க.சண்முகம் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றாா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக அவருக்கு ஆறு மாதங்கள் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த பணி நீட்டிப்பானது, ஜனவரி 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சனை நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் 47-ஆவது புதிய தலைமைச் செயலாளராக திங்கள்கிழமை (பிப்.1) பொறுப்பேற்கவுள்ள ராஜீவ் ரஞ்சன் தில்லியில் மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளத் துறைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தாா்.
அண்மையில் மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்குடன் துறையின் செயலாளா் என்ற முறையில் ராஜீவ் ரஞ்சன், தமிழகம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைமைச் செயலாளராக ஓய்வு பெறவுள்ள க.சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.