ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான 330 ஏக்கரில் 24 ஏக்கர் மட்டுமே உள்ளது: அமைச்சர்

 ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான 330 ஏக்கர் நிலத்தில் தற்போது 24 ஏக்கர் நிலம் மட்டுமே திருக்கோவில் வசம் உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு

திருச்சி:  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான 330 ஏக்கர் நிலத்தில் தற்போது 24 ஏக்கர் நிலம் மட்டுமே திருக்கோவில் வசம் உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சனிக்கிழமை காலை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு  மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த திருக்கோவில்கள் புனரமைக்கப்படாமல் கும்பாபிஷேக நடத்தப்படாமல் இருந்தது.

இனிவரும் காலத்தில் அதுபோன்ற கோவில்களை கண்டறிந்து புனரமைத்து குடமுழுக்கு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக கோவில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோசாலையில் நூற்றுக்கணக்கான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கி வருவதால் இடப்பற்றாக்குறை காரணமாக திருக்கோவில் வளாகம் அருகிலேயே மேலும் ஒரு கோசாலை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவில் அலுவலர்கள் கோவில் திருப்பணிகள் குறித்து பல்வேறு கருத்துகள் விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் வருகிறது. அதனை சரிசெய்த பிறகும், அதுகுறித்த தகவலை யாரும் பகிர்வதில்லை.  சிலை கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் கடந்த 1866-ஆம் ஆண்டு பிரிட்டிஷார் கணக்கின்படி 330 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. தற்போது 24 ஏக்கர் நிலம் மட்டுமே திருக்கோவில் வசம் உள்ளது. மீதம் உள்ள நிலங்களில் குடியிருப்புகள் கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலம் குறித்த வழக்குகள் சில நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கோவில் இடங்களில் குடியிருப்போர் தாமாக முன்வந்து அதற்கான வாடகை தரவேண்டும் என்றார் அமைச்சர் சேகர்பாபு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com