போலீஸார் விசாரணையின்போது கழுத்தை அறுத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர் சாவு

சென்னை அருகே திருமுல்லைவாயலில் காவல்துறை விசாரணையின்போது தன்னைத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டு பலத்தக் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் இறந்தார்.
போலீஸார் விசாரணையின்போது கழுத்தை அறுத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர் சாவு
போலீஸார் விசாரணையின்போது கழுத்தை அறுத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர் சாவு

சென்னை: சென்னை அருகே திருமுல்லைவாயலில் காவல்துறை விசாரணையின்போது தன்னைத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டு பலத்தக் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் இறந்தார்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:  அம்பத்தூர் எஸ்டேட் ஐசிஎஃப் காலனியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (32). இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். பாக்கியராஜ், திருமுல்லைவாயலில் உள்ல ஒரு தனியார் பள்ளியின் அருகே தனது நண்பர் ஒருவருடன் திங்கள்கிழமை மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ரோந்து வந்த திருமுல்லைவாயல் காவல் நிலைய காவலர்கள், இருவரையும் எச்சரித்தனர். மேலும் அவர்கள் மது அருந்திய இடத்தையும் மதுப்பாட்டில்களையும் காவலர்கள் செல்லிடப்பேசி மூலம் புகைப்படம் எடுத்தனராம். இதைப் பார்த்த பாக்கியராஜ், காவலர்களிடம் தகராறு செய்தார்.

தகராறு முற்றவே காவலர்கள், அவரது முகவரி, அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை கேட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனால் ஏற்கெனவே மதுபோதையில் இருந்த பாக்கியராஜ், கோபத்தில் மதுப்பாட்டிலை உடைத்து தன்னைத் தானே கழுத்தை அறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் காயத்துடன் அங்கிருந்து தப்பியோட முயன்றாராம்.

இதில் தடுமாறி கீழே விழுந்த பாக்கியராஜ் கழுத்தில், மதுப்பாட்டில்கள் ஆழமாக குத்தியதாம். இச்சம்பவத்தில் பலத்தக் காயமடைந்து மயங்கி விழுந்த பாக்கியராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாக்கியராஜ் இறந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து பாக்கியராஜ் சடலம், பிரேத பரிசோதனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இது குறித்து தகவலறிந்த பாக்கியராஜ் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அவர்கள், காவல்துறையைக் கண்டிக்கும் வகையில் கோஷமிட்டனர்.

இச்சம்பவம் குறித்து திருமுல்லைவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சம்பவத்தின்போது காவல்துறையினரின் அத்துமீறல் ஏதேனும் உள்ளதா என விசாரணை செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இச்சம்பவத்தின் காரணமாக திருமுல்லைவாயல், அம்பத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com