சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது மற்றும் நகரப் பேருந்துகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
கரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் முதற்கட்டமாக நகரப் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது உள்ளிட்ட தளர்வுகளை அறிவிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை சுகாதாரத் துறை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. போலி ‘ஆக்ஸி மீட்டா்’ செயலி மோசடி
முன்னதாக, தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகளை மட்டும் இயக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. எனவே இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக இது பற்றி ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழக அரசு அறிவித்த தளா்வில் 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக தளா்வுகள் அளிக்கப்பட்டன.
இதையும் படிக்கலாமே.. ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் சேமிப்புத் தொகை ரூ.20,706 கோடி
அழகு நிலையங்கள், சலூன்கள் குளிா் சாதன வசதி இல்லாமலும், ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. கோயில்கள், வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிப்பதற்கான தடை தொடருகிறது. அதுபோல பொதுப்போக்குவரத்தும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், கரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகளை மட்டும் இயக்க அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்குவதற்கு ஏற்ப போக்குவரத்து கழகங்கள் ஆயத்தமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.