சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு சரியாக 33 நாள்களுக்குப் பின் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று பேருந்துப் போக்குவரத்துத் தொடங்கியுள்ளது.
அதன்படி, மொத்தம் 1,746 பேருந்துகள் இன்று சாலைகளில் ஓடத் தொடங்கின. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதையும் படிக்கலாமே.. ரூ.1,000 பயண அட்டை ஜூலை 15 வரை செல்லும்: அமைச்சர்
மாநகரப் பேருந்து போக்குவரத்துக் கழகத்தின் 1,400 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதில் 691 சாதாரண கட்டணப் பேருந்து, 620 டீலக்ஸ் பேருந்துகள், 89 விரைவுப் பேருந்துகள் ஆகும்.
எனவே, இன்று இயக்கப்பட்டுள்ள 691 சாதாரணக் கட்டணப் பேருந்திகளில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர் ஒருவர் கட்டணமின்றி பயணிக்கலாம்.
மேலும், தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் 346 பேருந்துகளும் இன்று சேவையைத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, தற்போது கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகளின்படி, சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மீண்டும் பேருந்துப் போக்குவரத்து இன்று காலை தொடங்கியது.
கரோனா கால பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை சென்னை மாநகரிலும் அருகிலுள்ள மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. மாநகரில் பரவலாக மாநகர்ப் பேருந்துகள் இயங்கின.
எனினும், பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பேருந்துகளின் எண்ணிக்கையும் வழக்கத்தைவிடக் குறைவாக இருந்தது. பேருந்துகளில் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.