சென்னை: சமூக ஊடகங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை பகிர வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஊடகங்கள் வாயிலாக செய்திகளையும், செல்லிடப்பேசி வாயிலாக தனிப்பட்ட நபர்கள் ஒருவருக்கு ஒருவர் தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் வரை இந்த அளவுக்கு பிரச்னை இல்லை. ஆனால், எப்போது செல்லிடப்பேசிகள் பன்முகத் திறமை கொண்டதாக மாறியதோ, அன்று ஆரம்பித்தது சிக்கல்.
இதையும் படிக்கலாமே.. தடுப்பூசி செலுத்திக் கொண்டால்.. இதெல்லாம் நன்மைகள் : ஆய்வில் தகவல்
வாக்கு செலுத்தினால் மை வைத்த கைவிரலை புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் வைப்பது முதல் ஒரு நடிகருக்கு பிறந்தநாள் என்றால், அன்றைய தினம் பலருடைய ஸ்டேட்டஸ் அந்த நடிகருடையதாக மாறுவது வரை இந்த அக்கப்போர் நீளுகிறது.
இவ்வளவையும் செய்த நம்ம மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் சும்மா இருப்பார்களா? தடுப்பூசி செலுத்திக் கொள்வதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதோடு நின்றிருக்கலாம். சிலர் அப்படி புகைப்படம் எடுக்க முடியாவிட்டால், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கிடைத்ததும், அதனை அவரவர் சுமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டு விடுகிறார்கள்.
ஆனால் இது மிகவும் தவறு என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திகொண்ட சான்றிதழ்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்கவும். உங்களின் முழு பெயர், வயது, இருப்பிடம் மற்றும் அடையாள அட்டையின் சில தகவல்களை மோசடி நபர்களுக்கு நீங்களே கொடுப்பது போன்றது என்று சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.