சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: வடசென்னையில் மழை வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் வடகிழக்கு பருவமழையையொட்டி நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். வாகனங்களை பாதுகாக்க மேம்பாலங்களில் கார்களை நிறுத்திவருகின்றனர் உரிமையாளர்கள்.
மயிலாப்பூர், மந்தைவெளியில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கின்றன.
இதையும் படிக்க | பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
வடசென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வெள்ள பாதிப்பை பகுதிகளை பார்வையிடுவதற்காக, மகேந்திரா ஜீப்பில் வந்த முதல்வர், எழும்பூர், வேப்பேரி மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மழை நீரில் இறங்கி ஆய்வு செய்தார். மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிக்க | தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை ரத்து
மேலும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிட திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்த முதல்வர், அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவாயான நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வருடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பரந்தாமன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.