அதிமுகவுக்கு புதிய அவைத் தலைவரை நியமிப்பது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நலக் குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து புதிய அவைத்தலைவரை நியமிக்கும் பணியில் அதிமுக தலைமை ஈடுபட்டுள்ளது.
புதிய அவைத் தலைவரை நியமிப்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் இணைந்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேரடியாக அதிமுக அவைத் தலைவரை நியமிப்பதற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
உட்கட்சி தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே அவைத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அதிமுகவுக்கு புதிய அவைத் தலைவர் நியமிக்க தடை கோரிய வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் 10 நாள்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு நவ. 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.