கோவையில் 11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி. இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் அங்கு படிக்க விரும்பவில்லை எனக் கூறி அண்மையில் வேறு பள்ளிக்கு மாறினார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது வியாழக்கிழமை, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் சடலத்தைக் கைப்பற்றிய உக்கடம் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க | ஆசிய-பசிபிக் பகுதியில் பனிப்போா்
இந்நிலையில் மாணவியை அவர் முன்னர் படித்த தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதே அவரது தற்கொலைக்கு காரணம் என மாணவியின் உறவினர்கள் புகார் அளித்தனர்.
மேலும், உயிரிழந்த மாணவி தற்கொலைக்கு முன்னர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் அதைக் கைப்பற்றி போலீஸார் விசாரித்த வருகின்றனர்.
அந்தக் கடிதத்தில் மூவரது பெயர்களை அவர் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க | வாக்குவங்கியாக மாறிவிட்ட ஜாதியும் மதமும்!
இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆசிரியர் மீது மாணவியின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் ஆசிரியர் பணியாற்றும் தனியார் பள்ளியில் கோவை மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் கோவையில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.