மதுரை: கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆன்லைன் மூலம் மட்டுமே செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என மதுரையில் கடந்த இரு நாள்களாக கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் கோரிக்கை உயர்கல்வித்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மாணவர்கள் போராட்டம் காரணமாக, போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும் , மேலும் இன்று மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து கல்லூரி மாணவர்களையும் போராட்டத்திற்கு அழைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் தகவல்களை பரப்பி வருவதாகவும் , இதனை நம்பி கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் மதுரை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது சட்டரீதியான வழக்குகள் பதியும் போது மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | தடுப்பூசி செலுத்தியவா்கள் இந்தியாவுக்கு அச்சமின்றி பயணம் செய்யலாம்
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் முன்பாகவும் மற்றும் தமுக்கம் மைதானம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கல்லூரி கல்வி இயக்கக அலுவலகம் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி காவல்துறையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.