வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்ததை அடுத்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு நிற எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வியாழக்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டிருந்தது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை காலை சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர் தொலைவில் இரவு 1.30 மணியளவில் கரையைக் கடக்க தொடங்கிய நிலையில், சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் 4 மணியளவில் முழுமையாக கரையைக் கடந்தது. இதையடுத்து கடலோர மாவடங்களுக்கு விடுக்கப்பட்டிருந்து சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தபோது கடலோர மாவட்டங்களில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.