மன்னார்குடி: திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கில் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் சுமைதூக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மூவாநல்லூரில் தமிழ் நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.
இங்கு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அதேப் பகுதியில் உள்ள திறந்த வெளி நெல் கிடங்கில் அரவைக்கு அனுப்பி வைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழைக் காரணமாக நெல் மூட்டைகள் நனையாதபடி தார்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்முதல் நிலைய கிடங்கில், மன்னார்குடி அடுத்த பாமணி கீழத்தெருவை சேர்ந்த உத்திராபதி மகன் நடராஜன் (49) என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்துள்ளார்.
வெயில் அடிக்க தொடங்கியதால், வெள்ளிக்கிழமை, காலை வழக்கம் போல் மூவாநல்லூர் நெல் சேமிப்பு கிடங்கிற்கு வந்த நடராஜன், பிற இரு தொழிலாளர்களுடன் சேர்ந்து மழையில் நனைந்த நெல் மூட்டைகளை உலர்த்துவதற்காக நெல் அடுக்கி வைக்கப்பட்ட பட்டியை திறந்து நெல் மூட்டைகளை எடுத்துள்ளனர்.
அப்போது , நெல் மூட்டைகள் திடீரென சரிந்து விழுந்ததில். நெல் மூட்டைகளின் அடியில் சிக்கி நடராஜன் மூச்சு திணறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வேலை செய்து கொண்டிருந்த இருவர் உயிர் தப்பினர்.
இது குறித்து, தகவலறிந்த மன்னார்குடி காவல் நிலைய போலீஸார், நிகழ்விடத்திற்கு வந்து உயிரிழந்த நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த நடராஜனுக்கு, மனைவி செல்வராணி, 3 மகன்கள் உள்ளனர்.