குடியாத்தம்: வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே மாடி வீடு சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
பேர்ணாம்பட்டு நகரம், அஜீஜியா தெருவைச் சேர்ந்த மறைந்த அஸ்லம் மனைவி அனீஷா பேகம்(63). இவர் தனது பழமையான வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டு மாடியில் 2 குடும்பத்தினர் வாடகைக்கு உள்ளனர்.
ஆந்திரம் மாநில வனப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் பேர்ணாம்பட்டு நகரப் பகுதியில் கடந்த சில நாள்களாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரில் உள்ள கால்வாய்களில் வெள்ளநீர் செல்கிறது. வியாழக்கிழமை மாலை அஜிஜியா தெரு உள்பட 10- க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. அதிகாரிகள் கால்வாய்களை சீரமைத்து, தேங்கிய நீரை வெளியேற்றினர்.
இடிந்து விழுந்து தரைமட்டமான வீட்டில் சிக்கிக்கொண்டு உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்.
இந்நிலையில், இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால், அப்பகுதியில் 4 அடி உயரம் தண்ணீர் தேங்கியுள்ளது. காலை 6.30 மணியளவில் அனீஷா பேகத்தின் வீடு சரிந்து விழுந்து, தரைமட்டமானது.
இடிபாடுகளில் சிக்கி அனீஷா பேகம், அவரது மருமகள்கள் ரூகிநாஸ்(27), மிஸ்பா பாத்திமா(22), பேரன்கள் மன்னுல்லா(8), தாமீத்(2), பேத்திகள் அபிரா(4), அப்ரா(3), வாடகைக்கு தங்கியிருந்த ஆசிரியைகள் கவுசர்(45), தன்ஷிலா(27) ஆகிய 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறையினர் மீட்புப்பணியில்
ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் இடுபாடுகள் அகற்றப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டன.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர்.
இதில் காயமடைந்த 9 பேர் பேர்ணாம்பட்டு, வேலூர் அரசு மருத்துவமனைகளில்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், கோட்டாட்சியர் சா.தனஞ்செயன், எம்எல்ஏ அமலுவிஜயன், வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்டோர் அங்கு விசாரணை மேற்கொண்டனர்.