மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
சனிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்தது. அணை ஏற்கெனவே நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் 65 ஆயிரம் கனஅடி காவிரி நீரும், உபரிநீராக முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதில் நீர் மின்நிலையங்களின் வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 48,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் நீா் மட்டம் 120.10 அடியாக நீடிக்கிறது, நீா் இருப்பு 93.63 டி.எம்.சி ஆக உள்ளது.
அணையிலிருந்து 65,000 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டதால் சங்கிலி முனியப்பன் கோயில் அருகில் உபரிநீா் கால்வாயை ஒட்டி பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் வலது மற்றும் இடது கரையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காவிரிக் கரையோரங்களில் வருவாய்த்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் நீர் தேக்கத்தில் தற்போது 60 சதுர மைல் பரப்பிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் மீன்கள் பிடிபடாமல் மீனவர்கள் வாழ்க்கை முடங்கிப் போனது. 2000 மீனவர்களும், மீனவ உதவியாளர்களும் தங்களின் முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர்.