இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 23 பேர் இன்று சென்னை வந்தடைந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்திலிருந்து கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு இரண்டு மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தப் படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இது சம்பந்தமாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தீவிர முயற்சி மேற்கொண்டதன் பெயரில் இலங்கை பாயிண்ட் பெட்ரோ நீதிமன்றத்தில் இதுகுறித்து நடைபெற்று வந்த வழக்கில் அந்த 23 மீனவர்களை சிறையிலிருந்து விடுவித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் விடுதலை ஆனவர்கள் அனைவரும் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 4.15 மணி அளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர். சென்னையைச் சேர்ந்த பாஜக மாநில மீனவர் பிரிவு நிர்வாகிகள் அவர்களை வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்களை இலங்கை சிறையிலிருந்து மீட்டெடுத்த முழு பெருமையும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரைச் சேரும் என்று கூறி நன்றி தெரிவித்தார். இன்று வருகை புரிந்த 23 பேரில் 5 பேருக்கு கரோனா இருப்பதால் 18 பேர் மட்டும் இன்று ஊருக்குச் செல்ல இருக்கிறார்கள், மற்றவர்கள் சிகிச்சை முடிந்து குணமானபின் ஊருக்குச் செல்வார்கள் என்றார்.